Wednesday, 15th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர்கேட் பகுதியில் உள்ள காசி விநாயகர் ஆலய வளாகத்தில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் ரத்னகுமார் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக, தமிழக விவசாய நலச்சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் P.S.வேலப்பன் சிறப்பு அழைப்பாளாராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில், பால் உற்பத்தி செலவைக் கண்டறிய வேண்டும், பால் உற்பத்தி செலவிற்கு ஏற்ப கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலையை உயர்த்த வேண்டும், கூட்டுறவு சங்கம் பெரும் பாலுக்கு அரசு நிதியில் இருந்து ஊக்க விலை வழங்க வேண்டும், ISI பார்முலாவை SNF தரமறியும் பரிசோதனையில் அமுல்படுத்த வேண்டும்.
கால்நடைகளுக்கு காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும், சங்கப் பணியாளர்களது கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும், பால் பரிசோதனை காலை, மாலை என இருவேளைகளும் உறுதி செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், பொதுச்செயலாளர் M.G.இராஜேந்திரன், பொருளாளர் ராஜேந்திரன், இணைச்செயலாளர்கள் சிவக்குமார், சுப்ரமணியன், பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.
இதில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் M.G.இராஜேந்திரன் அளித்த பேட்டியில், பால் உற்பத்திச் செலவை அரசு கண்டறிய வேண்டும். இல்லையெனில் கணக்கின் அடிப்படையில் பால் கொள்முதல் விலை உயர்வு வழங்க வேண்டும். இதன் அடிப்படையில் விற்பனை விலையை உயர்த்த வேண்டும்.
பால் விற்பனை விலையை உயர்த்தாமல் கொள்முதல் செய்யும் பாலுக்கு லிட்டருக்கு அரசு நிதியில் இருந்து மானியமாக ரூ.7 வழங்க வேண்டும். இன்றைக்கு நாட்டு மாடுகள் மறைந்து, 100 % கலப்பின மாடுகளே பால் கரக்கின்றன.
இந்த கலப்பின மாடுகளின் பாலின் உற்பத்தி மற்றும் தரத்தை அதிகரிக்க கலப்புதீவனமே பிரதானம். எனவே அரசு கலப்புத்தீவனத்திற்கு 50% மானியம் வழங்க வேண்டும் என்றார்.